திடீரென்று ஒரு நாள்
என் மேஜையில் வைக்க
ஒரு பூந்தொட்டி வேண்டுமென்றாள்
இவள் இந்நாள் வரையில் என்னிடம்
கோப்புகள் மட்டுமல்லவா கேட்டிருக்கிறாள்
நேற்று வீட்டிற்கு சென்றபின்
அனுப்பிய மின்னஞ்சலுக்கு
இன்று அலுவலகம் வந்து சேரும்முன்
மறுமொழி அனுப்பக் கேட்டிருக்கிறாள்
நான் தகவல் கொடுக்கவில்லையென்றால்
பிறிதொரு நாட்களில் நிறுவனம்
ஸ்தம்பித்து விடுமோ என்று குழம்பியிருக்கிறாள்
இருப்பினும்
இவளுக்கு பூந்தொட்டியெல்லாம் தேவைப்படுமா
என்ற கேள்வியை அடக்கிக்கொண்டு
ஒரு ஆச்சரியத்தை பரிசளிக்க தயாரானேன்
என்ன நிறம் ?
என்ன செடி ?
என்ன வகை ?
பெரியதா சிறியதா ?
அடுக்கடுக்கான கேள்விகளுக்கு
கொஞ்சம் மூடிக்கொண்டு இருக்கிறாயா
என்ற பதிலை நாசூக்கான வார்த்தைகளில்
பெற்றேன் .
இப்போது நான் நினைத்தாலும்
பூந்தொட்டியை பரிசளிக்க முடியாது
ஏனென்றால்
நான் பரிசளிக்க போவது
பூந்தொட்டியை அல்ல
ஆச்சிரியத்தை
அவள் இதை மறந்ததாக நினைக்கும்
அளவுக்கு அவகாசம் கொடுத்த பின்
மூன்று லட்சத்தி நாற்பத்தியாராயிரத்தி
எழுநூற்று பனிரெண்டாவது முறையாக
உலகின் மிக கொடிய கொலைகாரனை
கண்டுபிடிக்க புறப்படும் துப்பறிவாளனை போல் ,
நகரின் மிகச்சிறந்த பூந்தொட்டியை கண்டுபிடிக்க
தயாரானேன்
நகரின் தென் பகுதியில் இருந்த ஒரு செடி
நான் அவள் அளவிற்கு அழகாக இல்லையென்றும்
கொஞ்சம் வடமேற்க்காக பயணிக்க வேண்டுமென்றும்
குறி சொன்னது
அங்கே நான் சந்தித்த செடி
நான் மிகவும் உயரமாக வளர்வேன் அதனால்
மேஜையில் எல்லாம் அமர முடியாது என்று திமிராக பேசியது
எதோ போனால் போகட்டுமென்று
நகரின் மேற்கு பகுதிக்கு வழி காட்டியது
மேற்கு பக்கத்தில் பார்த்த செடியிடம் நான்
எதுவும் பேசவில்லை .
நான் தேடி வந்தது அது இல்லை என்று
பார்த்தவுடன் புரிந்து விட்டது
கொஞ்சம் அதை அவமானப்படுத்துவது போல்
குற்றவுணர்ச்சி தோன்றினாலும்
தேவதையின் ஆசையை பூர்த்தி
செய்வதே கடைமையென்று எண்ணி
பயணத்தை தொடர்ந்தேன்
வடக்கு நோக்கி சென்று கொண்டிருந்தபோது
வழியில் ஒரு செடி என்னை பார்த்து
ஏளன சிரிப்பு சிரித்தது
அதனுடன் சண்டை போடும் மனநிலையில் நான்
இல்லையென்றாலும் மெதுவாக பேச்சு
கொடுத்து பார்த்தேன்
சிறு வயதில் நான் உடைத்த அம்மாவின்
எதோ ஒரு பூச்செடியின் ஆவி தான்
இப்போது என்னை இந்த நகரம் முழுவதும்
துரத்துகிறது என்றது .
அந்த கூற்றிலும் நியாயம் இல்லாமலில்லை
நான் தேடுவது நகரின் மையப்பகுதியில் இருப்பதாக
சொல்லி என்னை அனுப்பி வைத்தது
அலிபாபா திருடர் குகைக்குள்
நுழைவது போல் நகரின் மைய பகுதிக்குள்
அடியெடுத்து வைத்தேன்
நான் ஏதோ காலத்தில் கொன்று குவித்திருந்த செடிகள்
எல்லாம் குகைக்குள் உயிர்த்தெழுந்து இருப்பதை கண்டு
நடுக்கமாக இருந்தது .
தேவதையின் தேவையை
நிறைவேற்ற வேண்டுமென்ற
எண்ணம் மட்டுமே தொடர்ந்து
என்னை செலுத்திக்கொண்டு
இருந்தது
அவள் தேவதை என்பதாலோ என்னவோ
மாயாஜால கதைகளில் ஆட்டிடையன் வேடத்தில்
வரும் தேவதூதன் தோன்றி எனக்கான செடியை
காட்டினான்
ஆம், கண்டுபிடித்துவிட்டேன் !
வேரில் வெந்நீர் ஊற்றி கொன்ற
அம்மாவின் போகன்வில்லா செடியின் ஆன்மா தான்
தேவதூதன் காட்டின செடியில் குடியிருக்கிறது
ஆச்சரியத்தை மடியில் கட்டிக்கொண்டு
தேவைதைடம் சென்ற போது
அவள் தன சக தேவதைகளுக்கு ஆச்சரியங்களை
பரிசளிக்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தாள்
ஏனென்றால் அது ஆச்சரியங்களை பரிசளிக்கும்
வாலன்டைன்ஸ் தினமாம் !
நகர் முழுவதும் அன்று தேவதைகளுக்கு பலியிடப்பட்ட
ஆச்சரியங்களுக்குள் ஒன்றாக என் என்னுடையதும்
பலியிடப்பட்டது
உண்மையில் பரிசுகள் தேவதைகளை ஆச்சரிய
படுத்துவதில்லை
ஆச்சரியங்களும் தேவதைகளை ஆச்சரிய
படுத்துவதில்லை
நாம் என்றோ செய்த பாவங்களுக்கு பரிகாரமாக
இந்த ஆச்சரியங்கள் தங்களை தான்
தேவதைகளுக்கு பலியிட்டு கொள்கின்றன
மிகச்சரியாக இந்த பலியிடும் நாளில்
என்னால் பரிசு கொடுக்க முடிந்தது தான்
எனக்கு ஆச்சரியமாக இருந்தது