Monday 13 April 2020

ஆச்சரியங்களை பலி கேட்கும் தேவதைகள்

திடீரென்று ஒரு நாள் 
என் மேஜையில் வைக்க
ஒரு  பூந்தொட்டி வேண்டுமென்றாள் 

இவள் இந்நாள் வரையில்  என்னிடம் 
கோப்புகள் மட்டுமல்லவா கேட்டிருக்கிறாள் 
நேற்று வீட்டிற்கு சென்றபின் 
அனுப்பிய மின்னஞ்சலுக்கு 
இன்று அலுவலகம் வந்து சேரும்முன் 
மறுமொழி அனுப்பக்  கேட்டிருக்கிறாள் 
நான் தகவல் கொடுக்கவில்லையென்றால் 
பிறிதொரு நாட்களில் நிறுவனம் 
ஸ்தம்பித்து விடுமோ என்று குழம்பியிருக்கிறாள் 

இருப்பினும் 
இவளுக்கு பூந்தொட்டியெல்லாம் தேவைப்படுமா 
என்ற கேள்வியை அடக்கிக்கொண்டு 
ஒரு ஆச்சரியத்தை பரிசளிக்க தயாரானேன் 

என்ன நிறம் ?
என்ன செடி ?
என்ன வகை ?
பெரியதா சிறியதா ?
அடுக்கடுக்கான கேள்விகளுக்கு 
கொஞ்சம் மூடிக்கொண்டு இருக்கிறாயா 
என்ற பதிலை நாசூக்கான வார்த்தைகளில் 
பெற்றேன் .

இப்போது நான் நினைத்தாலும் 
பூந்தொட்டியை பரிசளிக்க முடியாது 
ஏனென்றால் 
நான் பரிசளிக்க போவது 
பூந்தொட்டியை அல்ல
ஆச்சிரியத்தை 
அவள் இதை மறந்ததாக நினைக்கும் 
அளவுக்கு அவகாசம் கொடுத்த பின் 
மூன்று லட்சத்தி நாற்பத்தியாராயிரத்தி 
எழுநூற்று பனிரெண்டாவது முறையாக 
உலகின் மிக கொடிய கொலைகாரனை 
கண்டுபிடிக்க புறப்படும்  துப்பறிவாளனை போல் ,
நகரின் மிகச்சிறந்த பூந்தொட்டியை கண்டுபிடிக்க 
தயாரானேன் 

நகரின் தென் பகுதியில் இருந்த ஒரு செடி 
நான் அவள் அளவிற்கு அழகாக இல்லையென்றும் 
கொஞ்சம் வடமேற்க்காக பயணிக்க வேண்டுமென்றும் 
குறி சொன்னது 

அங்கே நான் சந்தித்த செடி 
நான் மிகவும் உயரமாக வளர்வேன் அதனால்  
மேஜையில் எல்லாம் அமர முடியாது என்று திமிராக பேசியது 
எதோ போனால் போகட்டுமென்று 
நகரின் மேற்கு பகுதிக்கு வழி காட்டியது 

மேற்கு பக்கத்தில் பார்த்த செடியிடம் நான் 
எதுவும் பேசவில்லை . 
நான் தேடி வந்தது அது இல்லை என்று 
பார்த்தவுடன் புரிந்து விட்டது 
கொஞ்சம் அதை அவமானப்படுத்துவது போல் 
குற்றவுணர்ச்சி தோன்றினாலும் 
தேவதையின் ஆசையை பூர்த்தி 
செய்வதே கடைமையென்று எண்ணி 
பயணத்தை தொடர்ந்தேன் 

வடக்கு நோக்கி சென்று கொண்டிருந்தபோது 
வழியில் ஒரு செடி என்னை பார்த்து 
ஏளன சிரிப்பு சிரித்தது 
அதனுடன் சண்டை போடும் மனநிலையில் நான் 
இல்லையென்றாலும் மெதுவாக பேச்சு
கொடுத்து பார்த்தேன் 

சிறு வயதில் நான் உடைத்த அம்மாவின் 
எதோ ஒரு பூச்செடியின் ஆவி தான் 
இப்போது என்னை இந்த  நகரம் முழுவதும் 
துரத்துகிறது என்றது .
அந்த கூற்றிலும் நியாயம் இல்லாமலில்லை
நான் தேடுவது நகரின் மையப்பகுதியில் இருப்பதாக 
சொல்லி என்னை அனுப்பி வைத்தது 

அலிபாபா திருடர் குகைக்குள் 
நுழைவது போல் நகரின் மைய பகுதிக்குள் 
அடியெடுத்து வைத்தேன் 
நான்  ஏதோ காலத்தில் கொன்று குவித்திருந்த செடிகள் 
எல்லாம் குகைக்குள்  உயிர்த்தெழுந்து இருப்பதை கண்டு 
நடுக்கமாக இருந்தது .
தேவதையின் தேவையை 
நிறைவேற்ற வேண்டுமென்ற 
எண்ணம் மட்டுமே தொடர்ந்து 
என்னை செலுத்திக்கொண்டு 
இருந்தது 

அவள் தேவதை என்பதாலோ என்னவோ 
மாயாஜால கதைகளில் ஆட்டிடையன் வேடத்தில் 
வரும் தேவதூதன் தோன்றி எனக்கான செடியை 
காட்டினான் 
ஆம், கண்டுபிடித்துவிட்டேன் !
வேரில் வெந்நீர் ஊற்றி கொன்ற 
அம்மாவின் போகன்வில்லா செடியின் ஆன்மா தான் 
தேவதூதன் காட்டின செடியில் குடியிருக்கிறது 

ஆச்சரியத்தை மடியில் கட்டிக்கொண்டு 
தேவைதைடம் சென்ற போது 
அவள் தன சக தேவதைகளுக்கு ஆச்சரியங்களை 
பரிசளிக்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தாள் 
ஏனென்றால் அது ஆச்சரியங்களை பரிசளிக்கும் 
வாலன்டைன்ஸ் தினமாம் !
நகர் முழுவதும் அன்று தேவதைகளுக்கு பலியிடப்பட்ட 
ஆச்சரியங்களுக்குள் ஒன்றாக என் என்னுடையதும் 
பலியிடப்பட்டது 

உண்மையில் பரிசுகள் தேவதைகளை ஆச்சரிய 
படுத்துவதில்லை 
ஆச்சரியங்களும் தேவதைகளை ஆச்சரிய 
படுத்துவதில்லை 
நாம்  என்றோ செய்த பாவங்களுக்கு பரிகாரமாக 
இந்த ஆச்சரியங்கள் தங்களை தான் 
தேவதைகளுக்கு பலியிட்டு கொள்கின்றன 

மிகச்சரியாக இந்த பலியிடும் நாளில் 
என்னால் பரிசு கொடுக்க முடிந்தது தான் 
எனக்கு ஆச்சரியமாக இருந்தது 









 


 

Sunday 9 February 2020





பாய் பெஸ்ட்டி எனும் அவலநிலை

சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள பாய் பெஸ்டிக்களின் கதை என்ற கவிதையும் அது தொடர்பான ஏராளமான விவாதங்களும் என் மனதில் பல நினைவலைகளை தூண்டின. பெருன்பாலும் பாய் பெஸ்டிக்கள் இமைக்கா நொடிகள், மன்மதன் போன்ற படங்களில் காதலனுக்கு வரும் வில்லன்களை போன்ற தோற்றத்தையே பெற்றிருக்கிறார்கள். உண்மையில் அதெல்லாம் காதலர்களின் சந்தேக புத்தியின் வெளிப்பாடேயன்றி பாய் பெஸ்டிக்களால் ஒருபோதும் காதலனின் இடத்தை அடைய முடியாது.
ஒரு பாய் பெஸ்டி உறவு மலர முழு முதல் தேவை அந்த ஆண் சிங்கிளாகவும் பெண் ஏற்க்கனவே காதலன்/கணவனுடன் இருக்க வேண்டும். இரண்டு கமிட்டேட் அல்லது இரண்டு சிங்கள் நபர்களுக்குள் பாய் பெஸ்டி உறவு தோன்ற வாய்ப்பேயில்லை. அப்படி தோன்றினால் அது காதலிலோ நிரந்தர பிரிவிலோ தான் சென்று முடியும்.
எந்தவொரு ஆணினாலும் ஒருவித மெல்லிய காதலோ மையலோ தோன்றாத பெண்ணுடன் பாய் பெஸ்டியாக இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு நெருக்கமான உறவில் பெண்கள் வெளிப்படுத்தும் mood swing என்பது சராசரி ஆணை குழப்பி மன உளைச்சலுக்குள் தள்ள வல்லது . அதை முழுவதும் பொறுத்துக்கொண்டு அந்த பெண்ணை தாங்க வேண்டுமென்றால் காதல் என்ற உணர்வில்லாமல் முடியவே முடியாது.
எங்கே ஒருபாய் பெஸ்டி காதலனிடமிருந்தோ அல்லது தோழனிடமிருந்தோ வேறுபடுகிறான் என்றால் அது அந்த பெண் அவனுக்கு தரும் சிறப்பு அந்தஸ்தில் இருந்து தான். தான் அவளுக்கு காதலன் அல்லவென்று அவனுக்கு நன்றாக தெரியும் இருந்தும் காதலனையும் தாண்டிய சில வெளிகளை அந்த பெண் அவனுக்கு திறந்து விடுகிறாள். அவனை பொறுத்த வரையில் காதலன் என்பவன் முற்றிலுமாக அண்டை நாட்டவன். அவள் மனதில் நட்புக்கென்று ஒரு ராஜ்ஜியம் இருக்குமாயின் அதற்கு அவனே சர்வாதிகாரி. அதை அந்த பெண்ணும் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதப்படுத்தி கொண்டே இருப்பாள் . அவளது அண்மையில் அவன் சிறப்பானவனாக உணர்வதே எல்லா தொல்லைகளையும் தாண்டி ஒரு பாய் பெஸ்டியாக அவனை தொடர வைக்கிறது.
பாய் பெஸ்டியின் மிகப்பெரிய குழப்பமே அந்த பெண்ணின் மனதில் தான் என்னவாக இருக்கிறேன் என்பது தான். அவள் மீது தனக்கிருக்கும் காதலை இந்நேரம் அவள் உணர்ந்து கொண்டிருக்க வேண்டுமே. இருந்தும் என்னை ஏன் கூடவே வைத்திருக்கிறாள். அந்தளவு தான் முக்கியமானவன் என்றால் ஏன் அவளது காதலன் முன்பு மட்டும் அந்நியனாகி விடுகிறேன். அவள் காதலன் ஒன்றுமே செய்யாமல் அனுபவிக்கும் பல சலுகைகளை அவளுக்காகவே தவமிருக்கும் தன்னால் ஏன் அனுபவிக்க முடியவில்லை என்னும் கேள்விக்கு ஒரு பாய் பெஸ்டியால் கடைசி வரை விடையை கண்டு பிடிக்க முடிவதில்லை.
அவள் தன்னை உபயோகபடுத்தி கொள்கிறாளோ என்று பல்வேறு தருணங்களில் அவன் நினைக்கிறான். ஆனால் அவ்வாறு உபயோகப்படுவதால் தான் அவள் அருகாமையை பெற முடிகிறது என்று உணர்ந்த அடுத்த தருணமே தன்னைத்தான் சமாதான படுத்திக்கொள்கிறான்.
பாய் பெஸ்டியின் பதவி என்பது எவ்வித நிச்சயத்தன்மையும் அற்ற பதவி. எந்த நேரத்திலும் தான் தூக்கியெறியப்படுவோம் என்று அவன் உணர்ந்தே இருக்கிறான். ஏனென்றால் தன்னை கூட வைத்திருப்பதற்கான எந்த தேவையும் அவளுக்கு இல்லை என்று அவனுக்கு தெரியும்.
பாய் பெஸ்டிகளின் மனதில் எப்போதும் விடை தெரிந்த கேள்விகள் தொக்கி நின்று கொண்டேயிருக்கிறது . அந்த கேள்விகளை அவனே கேட்டு அவனே விடை சொல்லிக்கொள்கிறான் .
அவனது நிலை கண்டு அவன் சுற்றத்தார் வீசும் கிண்டல்களை பற்றி அவனுக்கு கவலையேயில்லை . அவன் கவலையெல்லாம் அந்த கிண்டல்களை தன தோழி எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பது தான்.
மனுஷ்ய புத்திரனின் கவிதையின் முடிவு தான் அபாரமானது. எந்த பெண்ணும் விரும்பி விபச்சாரத்திற்குள் செல்வதில்லை என்பது போல் எந்த ஆணும் விரும்பி பாய் பெஸ்டியாக இருப்பதில்லை. காலமும் சூழலும் அவனை அந்த இடத்திற்கு தள்ளியிருக்கிறது. அது அவன் தேர்தெடுத்ததில்லை, அவனுக்கு வாய்க்கப்பெற்றது .
பாய் பெஸ்டியாக இருக்கும் எந்த ஆணுக்கும் அந்த தோழி கேர்ள் பெஸ்டியாக இருப்பதில்லை ..







































Saturday 29 April 2017

பாகுபலி




முதல் விஷயம் .. பாகுபலி போன்றதொரு செலவுமிக்க படத்தை இந்தியாவில் கிடைக்கும் தொழில்நுட்பங்களை வைத்து எடுப்பதே ஒரு பெரும் பணி தான். இது போன்றதொரு செயல் திட்டத்தை படிப்படியாக நிறைவேற்றிய தயாரிப்பாளர் , இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞ்சர்கள் நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர்கள் . இவர்களிடமிருந்து மேலாண்மை நுட்பங்களை நிச்சயமாக கற்று கொள்ளலாம் .

பாகுபலியின் மொத்த கதையையும் பார்த்த பின்னர் நமக்கு பிடிபடும் விஷயம் இந்த கதையின் பெரும்பான்மையான பாகம் பாகுபலி 2ன் முதல் பாதியிலேயே அடக்க கூடியது தான். இதை ஒரு லீனியர் கதையாக பார்த்தால் சிவகாமி தேவி எனும் அரசி . அவளுடைய இரண்டு புதல்வர்கள் , அவர்களில் ஒருவன் அரசனாக தேர்ந்தெடுக்க படுக்கிறான் . அவன் திக் விஜயம் செய்ய புறப்பட்டு போன காலத்தில் நடைபெறும் சில சம்பவங்களை வைத்து அவன் அண்ணன் ஆட்சியை கைப்பற்றுகிறான் . தொடர்ந்து தம்பியையும் அம்மாவையும் கொன்று தம்பி மனைவியை அடிமைப்படுத்துகிறான் . 25 ஆண்டுகளுக்கு பின் பாகுபலியின் மகன் வந்து  போர் செய்த்து தனது பெரியப்பாக்கு பெரிய ஆப்பா வைக்கிறான் .

இந்த கதை  மொத்தம் 329 நிமிட கதையாக சொல்லப்பட்டிருக்கிறது . ஒரு பேட்டியில் ராஜமௌலி சொல்லியிருந்தார் , இந்த கதையை முடித்தவுடனே தனக்கு தெரிந்து விட்டது இதை ஒரு பாகமாக எடுக்க முடியாது என்று . படத்தில் அவர் நம் காதில் சுற்றய பூவை விட பெரிய பூ இந்த பதில் தான். திரைக்கதை பற்றி , கதை சொல்லல் முறைகைளை பற்றி கொஞ்சமேனும் அறிவுள்ள எவருமே சொல்லிவிடுவர் இந்த திரைக்கதைக்கு 329 நிமிடங்களுக்கான தேவை இல்லையென்பதை . இரண்டு பாகமாக பார்த்தால் படத்தில் மொத்தம் 10 பாடல்கள், அது போக பிரதான கதைச்சரடிற்கு தொடர்பில்லாத எத்தனை subplots இதில் உள்ளன . தமன்னா இடம் பெரும் எந்த காட்சியுமே கதைக்கு தேவை இல்லாததல்லவா .. இரண்டு பாகங்களிலும் உள்ள தேவை இல்லாத நகைச்சுவை காட்சிகள் எல்லாம் எதற்கு ? தேவ சேனாவின் மாமா பாத்திரம் எதற்கு ? பாகுபலி இரண்டு பாகமாக வந்தது முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடனே அன்றி வேறில்லை . வணிக நோக்கத்தில் தவறே இல்லை தான் . இரண்டு படம் எடுத்து பணம் பண்ணுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லவே இல்லை .. ஆனால் இரண்டும் இரு முழுமையான படங்களாக இருக்க வேண்டுமல்லவா ? இரண்டு படத்திற்கு தேவையான கதை வேண்டுமல்லவா . கதாபாத்திரங்களை நிறுவுவதற்கு மட்டும் ஒரு படம் , மீதி சம்பவங்களை சொல்ல இன்னொரு படமா ? இப்படி ஒரு சினிமா வியாபார உத்தியை எங்குமே கேள்விப்பட்டது இல்லையே . இதிலெல்லாம் மிகப்பெரிய காமெடி WKKB என்றதொரு மொக்கையான கேள்வியை தேசிய ட்ரெண்ட் ஆக்கியது . மோடியின் scripted ட்ரெண்டிங்கிற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. முழுக்க முழுக்க வியாபார நோக்கத்துடன் இந்த கதையை அணுகியதால் மட்டுமே இத்தனை தேவையில்லாத கதை சரடுகளை நுழைக்க வேண்டி வந்துள்ளது என்பது எனது அனுமானம் .

இரண்டாவது படத்தை வெறுக்க செய்த விஷயம் இத்தனை inhuman ஆன ஹீரோயிசம் . ஒரு அளவு வேண்டாமா ? இது விஜயகாந்த் படமோ பாலகிருஷ்ணா படமோவாக இருந்தால் பரவாயில்லை . இந்திய அளவில் ஹாலிவுட்டுக்கு நிகரான படமென்று விளம்பரம் செய்யப்படும் படத்தில் இவ்வளவு illogical ஆன ஹீரோயிசம் வேண்டுமா ? அதில் உச்சம் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் . அந்தரத்தில் உருளை அமைத்து பல அடி தூரத்தில் சென்று விழுகிறார்களே , கொஞ்சம் யோசித்து பாருங்கள் , அந்த கேடயத்தை பிடித்திருக்கும் கைகள் என்னவாகுமென்று ? அந்த போர் வீரர்கள் அனைவரும் பயிற்சி பெறாதவர்கள் வேறு . கில்லியில் ஹீரோ 300 பேருக்கு தண்ணி காட்டி விட்டு தப்பிப்பது , கத்தியில் 50 பேரை அடிப்பது போன்ற காட்சிகளும் மிகைப்படுத்த பட்டது தான் . ஆனால் அந்த திரைக்கதையில் எவ்வளவு புத்திசாலித்தனம் இருந்தது . பாகுபலியின் பலமே  இதில் இடம் பெரும் போர் காட்சிகள் தான் . காளகேயர்களுடனான போரில் எரிபொருள் தடவிய துணியை உபயோகித்தது , எருமை மாடுகளை கொண்ட போர்காட்சி , அணையை உடைப்பது போன்றவை எல்லாம் கூட ஏற்றுக்கொள்ள கூடியதாகவே இருந்தது, எனில் இறுதிக்காட்சி,... சத்தியமாக சொல்கிறேன் ஒத்துக்கொள்ள  முடியவில்லை . ஏழாம் அறிவுக்கு நடந்த அதே கதி  தான் இந்த காட்சிகளுக்கும் .

மூளையை கழட்டி வைத்து விட்டு இது போன்ற படங்களை பார்க்க வேண்டும் என்று யாராவது சொன்னால் அப்படியே ஓடி விடுங்கள் . நான் எதற்கய்யா மூளையை கழட்டி வைக்க வேண்டும் . எனது மூளையை திசை திருப்ப வேண்டியது அந்த திரைக்கதை ஆசிரியனுடைய வேலை அல்லவா? படத்திற்கு வரும்போதே மூளையை கழட்டி வைத்து வாருங்கள் என்று ஒரு திரைக்கதை ஆசிரியன் / இயக்குனர் சொல்வாராகில் அதன் பேர் தடித்தனம் . நான் மூளையை கழட்டி வைக்க வேண்டுமென்றால் உனக்கெதற்கு இந்த ஆள் அம்பு சேனை 300கோடி பணம் எல்லாம் ? இன்செப்ஷன் போன்ற படங்கள் எப்போது இந்தியாவில் வரும் என்று அமீர் கானிடம் கேட்ட போது , அவர்கள் மூளையை நன்றாக உபயோகித்து படம் பார் என்கிறார்கள் , நாமோ மூளையை கழட்டி வைத்து விட்டு படம் பார்க்க சொல்கிறோம் என்றார்.

பாகுபலியில் கவரக்கூடியது இதன் கிராபிக்ஸ் காட்ச்சிகள் தான். நிச்சயமாக இதன் பின்னால் நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப கலைஞ்சர்களின் உழைப்பும் நேரமும் கொட்டிக்கிடக்கிறது .அவர்களுக்கெல்லாம் மனமார்ந்த பாராட்டுக்கள். யு கைஸ் டிசர்வ் எ ஸ்தாண்டிங் ஓவேஷன் . பிக் சல்யூட் .

எந்த ஒரு கதைக்கும் ஒரு அரசியல் இருக்கும் . பாஹுபலிக்கும் அது இருக்கிறது . அத ஜஸ்ட் லைக் தாட் கடந்து சென்று விட முடியாது .

"தலித் மக்கள் மேல பொதுவான ஒரு குற்றச்சாட்டு இருக்குங்க .. என்னடா இவனுங்க எப்ப பாத்தாலும் ஜாதி ஜாதின்னு பேசினு இருக்காங்க , இவங்களுக்கு வேற பிரச்சனையே இல்லையா ? நான் சாத்தியமா சொல்றேங்க எனக்கு ஜாதி ஒன்னு தான் பிரச்சனை . நான் எங்க போனாலும் என் ஜாதி என் கூடவே வரும் . "

விகடன் மாணவ பத்திரிக்கையாளர் கேள்வி பதில் நிகழ்வில் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியது .

கொஞ்சம் கூட மனித தன்மையோ ஈவு இரக்கமோ அற்ற செயல்களை கலாச்சாரம் என்ற பெயரில் போற்றி பாதுகாக்கும் கயவாளித்தனமான தேசம் இது. இங்கே இந்த மனு அரசியல் எந்த ரூபத்தில் எவ்வளவு நுட்பமாக இருந்தாலும் அதை நொண்டி நொங்கெடுக்க வேண்டியது ஒரு பகுத்தறிவாளனின் கடமை . அதனால் இது போன்ற ஒரு வணிக படத்தை முன்வைத்து இப்படி ஒரு கருத்து தேவையா என யாரும் நினைக்க வேண்டாம் .

தமிழ் நாட்டில் தான் ஜாதி பெயரை பேருக்கு பின்னால் வழக்கம் கிடையாதே , அப்புறம் என்னய்யா பல்வாள் "தேவன்" பிக்காளி "தேவன்" ?? காளகேய மொழி ஒன்றை உருவாக்கியவர்களுக்கு வேறு பெயரே கிடைக்கவில்லையா ? இது ராஜமௌலிக்கு தெரியவில்லை பாவம் என்றால் மதன் கார்க்கிக்கும் தான் தெரிய வில்லையா ?

மீண்டும் மீண்டும் பாகுபலி சத்திரிய தர்மம் தர்மம் என்று கொக்கரிக்கிறாரே ? அந்த தரும கருமத்தை வைத்து தான் இந்த நாட்டில் இவ்வளவு அடிமை படுத்துதல் நடந்தது . அதை கூவி கூவி விற்கும் ஒருவனை கதாநாயகனாக காட்டுவதன் மூலம் ராஜமௌலி என்ன சொல்ல வருகிறார் . மனு தர்மம் எனும் அயோக்கியத்தனத்திற்கு விளக்கு பிடிக்கும் வேலையில்லாமல் வேறென்ன இது?

இதற்க்கெல்லாம் உச்சமாக கட்டப்பா கதாபாத்திரம் . தான் ஒரு அடிமை என்பதையே மீண்டும் மீண்டும் தனக்கு தானே கூறி புளங்காகிதம் அடையும் ஒரு கதாபாத்திரம் . வார்த்தைக்கு வார்த்தை தான் ஒரு அடிமை என்பாராம் . தன சொந்த மூளையை கொஞ்சம் கூட உபயோகிக்க மாட்டாராம் , பிஞ்சு குழந்தையின் காலை கூட தலையில் தூக்கி வைத்துக்கொள்வாராம் . மாவீரன் பாகுபலி சத்திரியன் என்றால் அவன் குடும்பத்துக்கு அடிமையாக வேலை செய்யும் கட்டப்பா எந்த தருமத்தை கடை பிடிக்க வேண்டியவன் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை .இந்த கட்டப்பா வை பல்வாள் தேவன் அவமான படுத்துவதை விட பாகுபலியே அதிகமாக அவமான படுத்துகிறான் . பாகுபலி தன்னிடம் காட்டும் கரிசனத்தை கண்டு உச்சி குளிர்ந்து போகிறார். ஒருவன் தன்னிடம் கரிசனம் காட்டுவதே பெரும் பேரு  என்று ஒரு மனிதன் நினைக்கிறான் என்றால் அவனுக்குள் எவ்வளவு மானங்கெட்ட தன்மை இருக்கும் . அய்யா பாகுபலிக்களே , கட்டப்பக்களுக்கு தேவை உங்கள் கரிசனமோ  அன்போ கிடையாது , அவர்களின் தேவை மரியாதை தான் . உன் கரிசனத்தை குப்பையில் போடு . ஒருவேளை கட்டப்பா உன் குழந்தையை தூக்க மறுத்திருந்தால்? உன்னுடன் கூட்டு சேர்ந்து போரிட மறுத்திருந்தால் ? அப்போதும் உன் எதிர்வினை இப்படி தான் இருக்குமா ?

இரண்டு  வருடங்களுக்கு முன் காட்சி பிழை இதழிலோ அந்தி மழை இதழிலோ வாசித்த ஒரு கட்டுரையில் வாசித்த  கருத்து தான் நினைவுக்கு வருகிறது. இந்தியாவை , ஹிந்துத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு மக்கள் கூட்டமாக ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே பிஜேபி ஆஎஸ்எஸ் போன்ற அமைப்புகளின் 60 ஆண்டு கால ஆசை . ஆனால் அது அவர்களுக்கு நிறைவேறாத ஆசையாகவே இருக்கிறது . எனில் மொத்த இந்தியாவும் பாகுபலியை கொண்டாடுவதன் மூலம் அவர்களால் சாதிக்க முடியாததை அவர்கள் ஆட்சி காலத்திலேயே சத்தமே இல்லாமல் சாத்தித்து காட்டியிருக்கிறது பாகுபலி

நண்பர்களே, தயவு செய்து ஒரு படத்திற்காக அதிகமாக கூவுகிறேன் என்று நினைக்க வேண்டாம் . மேலே கூறியது போன்ற விஷயங்களை பாகுபலி போன்ற அனைத்து மக்களுக்கும் சேரும் படத்தில் எந்தவொரு கூசலும் இல்லாமல் காட்டுகிறார்கள் , நாமும் அதை பற்றின சுரணையே இல்லாமல் பார்த்து வருகிறோம் என்றால் நமக்குள்ளும் அந்த மனநிலையே இருக்கிறதுஎன்று அர்த்தமல்லவா ? அதை சுட்டி காட்டியே ஆக வேண்டும் என்பதாலே குறிப்பிடுகிறேன் .

கடைசியாக,  கடந்த ஒரு சில வருடங்களாக சினிமாவை பயில முயற்சி செய்யும் ஒரு மாணவனாக சொல்கிறேன். சினிமாக்காரனும் அடிப்படையில் ஒரு கதை சொல்லி மட்டுமே . அந்த கதையின் மூலம் அவன் அரசியல் பேசுகிறானா பொழுது போக்குகிறானா அல்ல வேறேதும் முயல்கிறானா என்பது இரண்டாம் பட்சமே , ஆனால் கதை சொல்லியே ஆக வேண்டும் . அதற்காக அவன் பயன் படுத்தும் கருவிகள் மட்டுமே மற்ற ( பணம் , தொழில்நுட்ப கலைஞ்சர்கள் ) அனைத்தும். பாகுபலியின் தொழில்நுட்பத்தின் மீதான மிரட்ச்சியால் படத்தை
 கொண்டாடுபவர்கள் சினிமா என்னும் கலையை இன்னும் புரிந்து கொள்ள வேண்டும் .

Tuesday 4 April 2017

சத்திய சோதனை







கடந்த ஜனவரி 30 அன்று நண்பர் கருந்தேள் ராஜேஷின் ஒரு பதிவை மிகவும் ஆர்வத்துடன் படித்துக்கொண்டிருந்தேன். சிறு வயதில் அவர் எப்படி தத்தியாக இருந்தார் அதன் பின் எவ்வாறு தன்னை மாற்றி கொண்டார் என்பதை பற்றின பதிவே அது . படிக்க படிக்க விறுவிறுவென இருந்தது, ஏனெனில் நீண்ட நாட்களாக தேளை தொடர்ந்து வாசித்து வருகிறேன் . அவரது புரிதல், maturity , genius ஐ பார்த்து மிகவும் வியந்துள்ளேன் . அப்படிப்பட்ட ஒருவர் மிகவும் தத்தியாக இருந்து மூன்றே வருடங்களில் தன்னை மாற்றிக்கொண்டார் என சொன்னபோது தொற்றிக்கொண்ட ஆர்வமே . தொடர்ந்து அந்த மாற்றத்திற்கு காரணம் ஒரு புத்தகம் என்றும் குறிப்பிட மனதிற்குள் என்ன புத்தகமாக இருக்குமென ஓடிக்கொண்டிருந்தது . இறுதியில் அந்த புத்தகத்தின் பெயரை அறிந்த பொது ஆச்சிரியம் இருமடங்கானது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின் சுயசரிதையான சத்திய சோதனையே அது. அவ்வளவு காலம் யார் மீது மிகுந்த விமர்சனங்கள் வைத்தோமோ  அவருடைய சுய சரிதை தான் எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆளுமையை மாற்றியிருக்கிறது என்று தெரிந்ததுமே முதல் வேலையாக அமேசானில் ஆர்டர் செய்தென். காந்தி பிறந்த மண்ணான குஜராத் அகமதாபாத்தில் இருந்து அந்த புத்தகம் ஷிப் ஆகி வருவதை ட்ராக் செய்வதே உற்ச்சாகமான அனுபவமாக இருந்தது (கொஞ்சம் ஓவரா தெரியுதோ :D)

புத்தகம் கிடைத்தவுடனே அப்போது வாசித்துக்கொண்டிருந்த விநாயக முருகனின் வலம் நாவலை  கிடப்பில் போட்டுவிட்டு இதை துவங்கினேன். 

நிச்சயமாக நண்பர்களே... அனைவரும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் . அதிலும் பெரியார் அபிமானிகள் இதை விருப்பு வெறுப்பின்றி படித்தே ஆக வேண்டும் . ஏனெனில் நான் பெரியார் சிந்தனை பள்ளியை சேர்ந்தவன் . அதனாலேயே பெரியார் அபிமானிகள்  விருப்பு வெறுப்பின்றி படிக்க வேண்டும் என்று சொல்கிறேன் . 

நாம் அனைவருக்குமே காந்தி மீது ஒரு சிறிய வெறுப்பு இருக்கும் . அல்லது காந்தியை குறை கூறுவதை ஸ்டைல் statement ஆக வைத்திருப்போம் . காந்திதிக்கு இருந்த , அல்லது இருந்ததாக கேள்விப்பட்ட பிற்போக்கு சிந்தனைகள் மீதான ஒவ்வாமையே அதற்க்கு காரணமாக இருக்கும். அவரது சுய சரிதையை வாசிக்கும்போது இந்த பிம்பங்கள் நிச்சயமாக உடையும் . நிச்சயமாக அவரும் நம் பெரியாருக்கு நிகரான ஒரு ஆளுமையே . பெரியார் ஒரு superman என்றால் காந்தி ஒரு batman . சூப்பர்மேன் நார்மல் மனிதன் கிடையாது . இயல்பிலேயே superhumen சக்திகள் கொண்டவன், அதுபோல் பெரியார் பிறப்பிலேயே ஒரு ஆல்பா . ஒரு மிக உறுதியான கருத்தாளனாக , சமூக போராளியாக மாறுவதற்கு முன்பே அசாதாரணமான குணநலன்களை கொண்டிருந்தவர். எந்தவிதமான சமூக கட்டுகளுக்கும் மாஸ் ஹிஸ்டிரியாவுக்கும் தன்னை உட்படுத்திக்கொள்ளாதவர். அவரது பால்ய காலத்தை பற்றி வாசிக்கும்போது ஒரு 'என்னமோ போடா மாதவா' attitude  காணக்கிடைக்கும் . புத்தரும் கவுண்டமணியும் சேர்ந்த கலவை பெரியார். be  like bro வின் thug life போன்றது அவரது வாழ்க்கை.

ஆனால் ஒரு சாதாரண மனிதன் பெரியாராக முடியுமா? மிகவும் கடினம். ஒருவன் பெரியார் சிந்தனை பள்ளியின் மாணவன் ஆகலாம் . புத்தரின் சீடர்கள் மீண்டும் லைகீக வாழ்க்கைக்குள் திரும்பிய பின் எப்படி வாழ்ந்திருப்பார்களோ அது போல் பெரியார் அபிமானிகளால் வாழமுடியும். ஆனால் அந்த சீடர்கள் எப்படி புத்தரில்லையோ அது போலவே நாமும் பெரியார் ஆக  முடியாது.

இங்கு தான் காந்தியின் ஆளுமை முக்கியமாதாகிறது . காந்தி இயல்பில் ஒரு ஆல்பா அல்ல. அவர் முழுக்க முழுக்க self  made personality . ப்ருஸ் வெய்ன் பேட்மேன் ஆனது போல் கடும் முயற்சிகள் மேற்கொண்டு காந்தி மகாத்மா ஆகிறார். 

சிறு வயதில் காந்தி ஒரு பயங்காளி . கூட்டத்தில் பேசுவதென்றால் பயம். பெரியவர் பேச்சை ஏன் எதற்க்கென்று கேள்வி கேக்காமல் அப்படியே கடைபிடிக்கும் பழக்கமுடையவர் (இந்த இடத்தில் நமது பகுத்தறிவு பகலவன் தன் சித்தி வீட்டில் அடித்த லூட்டிகளை ஒப்பிட்டு பாருங்கள்  ). மனைவியை சந்தேகித்து torture செயகிறார். செக்ஸ் ஐ enjoy செய்வதில் குற்றவுணர்வு கொள்கிறார். ஆனால் ஏதோ ஒரு தேடல் மட்டும் அவருக்குள் இருக்கிறது. எவ்வளவு நகைப்புக்கு உள்ளானாலும் சரி, தனது செயல்களை தொடர்ந்து ஒரு சோதனைக்கு உள்ளாக்கிக்கொண்டே இருக்கிறார். தனக்கு நேரும் ஒவ்வொரு அனுபவத்தையும் கூர்ந்து கவனிக்கிறார். அதற்கான பிரதிவினையை ஆராய்கிறார் . தனது மனமும் அறிவும் எதை சரி என்று சொல்கிறதோ அதற்க்கேற்றவாறு பிரதிவினைகளை மாற்றிக்கொள்கிறார். இந்த குணாதிசயம் தொடர தொடர சொந்தமாக முன்னெடுப்புகள் எடுக்கவும் தொடங்குகிறார். முன்னெடுப்புகள் தோல்வி அடையும் போதும் நாம் சாதாரண மனிதர்கள் செய்வது போல அலுத்துக்கொள்ளவும் செய்கிறார். வாழ்க்கையையே ஒரு ட்ரையல் அண்ட் எர்ரர் ஆக வாழ்கிறார். 

காந்தியின் இந்த சமவயதை பெரியாருடன் ஒப்பிட்டு பார்த்தால் பெரியாருக்கு இது போன்ற பிரக்ஞ்சைகள் எதுவுமே இருக்காது. மனம் போன போக்கில் வாழ்க்கையை ஜாலியாக கழித்துக்கொண்டிருப்பார். காந்திக்கு தனக்குள் நிகழும் ஒவ்வொரு மாற்றமும் தெரிந்திருக்கிறது . மிக கவனமாக வெற்றியையும் தோல்வியையும் ஒரே மனதுடன் எதிகொள்கிறார். 

நமது ஆளுமையை  மாற்றவேண்டும் என்று பிரயத்தனப்படும் அனைவருக்குமே , தனது சக்த்திக்கு மீறிய விஷயங்களை கையாள்வதில் ஒரு மனப்போராட்டம் இருக்கும் . வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கையும் விடா முயற்சியால் வாழ்வின் போக்கை மாற்ற முயலும் மனப்பாங்கையும் சரியாக balance செய்யும்போதே ஒரு மனிதன் ஆல்பாவாக , தலைவனாக , ஆளுமையாக மாற முடியும். இந்த இடத்திலேயே ஒரு சாதாரண மனிதனுக்கு காந்தி முன்னுதாரணமாகிறார். நாங்கள் உங்களை எவ்வளவு தாழ்வாக நினைத்துக்கொண்டிருந்தாலும் சரி, காந்தியால் மகாத்மாவாக முடியுமென்றால் உங்களாலும் உங்கள் ஆளுமையை மாற்றிக்கொள்ள முடியும் . இதை ஒரு துளி கூட அவரை தரம் தாழ்த்தி சொல்லவில்லை, நம்மை போன்ற ஒரு சகமனிதரின் பயணத்தை வியந்து பார்த்து சொல்கிறேன் . 

சுய முன்னேற்ற நூல்களை படித்து அதன்படி மாற முயற்சித்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவரும் காந்தியை படியுங்கள். நாம் இப்போது முயல்வதை அந்த மனிதர் 130 ஆண்டுகளுக்கு முன்பே செய்து வெற்றி கண்டிருக்கிறார். அவர் நம்மில் ஒருவர். நமது சகபயணி , தொடர்ச்சியான முயற்சிகளுக்கு என்றுமே பலன் கிடைக்காமல் போகாதென்பதை நம் காதுகளில்  அவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார். 

பின்குறிப்பு : ராஜ்குமார் ஹிரானியின் லகே ரஹோ முன்னாபாய் படத்தை பார்க்கவில்லையென்றால் உடனே பாருங்கள். அந்த படத்தில் காந்தியை தீவிரமாக வாசிக்கும் சஞ்சய் தத்துடன் காந்தி வந்து உட்காந்துக்கொள்வார். நண்பனாக வழிகாட்டியாக வருவார். சத்திய சோதனை படித்த பின்பு நம்மாலும் அந்த அனுபவத்தை உணர முடியும் 

Friday 4 October 2013

VIKATAN MARKS ( ? / 100 )






விகடன் மதிப்பெண்கள் 

28 மதிப்பெண்கள் :-
   
    *மாயாண்டி

36 மதிப்பெண்கள் :-

    *மேதை

37 மதிப்பெண்கள் :-

    *அன்னக்கொடி

    *அலெக்ஸ் பாண்டியன்
 
    *மூன்று பேர் மூன்று காதல்

    *தேசிங்கு ராஜா

    *சுறா

38 மதிப்பெண்கள் :-

    *சொன்னா புரியாது

    *பட்டத்து யானை

    *முத்திரை

    *போட்டா போட்டி

    *வெளுத்துக்கட்டு

39 மதிப்பெண்கள் :-

    *தாம் தூம்

    *அம்மாவின் கைபேசி

    *குட்டிப்புலி

    *வித்தகன்

    *உயர்திரு 420

    *அம்பாசமுத்திரம் அம்பானி

    *வெடி

40 மதிப்பெண்கள் :-

    *அமீரின் ஆதி பகவன்

    *தாண்டவம்

    *நீதானே என் பொன்வசந்தம்

    *நியூட்டனின் மூன்றாம் விதி

    *சகுனி

    *கிருஷ்ணவேணி பஞ்சாலை

    *லீலை

    *மை

    *டூ

    *காதல் சொல்ல வந்தேன்

    *வனயுத்தம்

    *எத்தன்

    *மகிழ்ச்சி

41 மதிப்பெண்கள் :-

    *ஜெயம் கொண்டான்

    *தில்லு முல்லு

    *முகமூடி

    *துரோகி

    *கடல்

    *கேடி பில்லா கில்லாடி ரங்கா

    *கலகலப்பு

    *வருத்தப்படாத வாலிபர் சங்கம்

    *ஐந்து ஐந்து ஐந்து

    *தில்லாலங்கடி

    *யுத்தம் செய்

    *வெங்காயம்

    *மயக்கம் என்ன

    *இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்

    *கோரிப்பாளையம்

    *குள்ளநரிக்கூட்டம்

    *பொன்னர் சங்கர்

    *நகரம் மறுபக்கம்

42 மதிப்பெண்கள் :-

    *மனம் கொத்தி பறவை

    *வத்திக்குச்சி

    *பாஸ் [எ] பாஸ்கரன்

    *போடா போடி

    *பச்சை என்கிற காத்து

    *மங்காத்தா

    *தீக்குளிக்கும் பச்சை மரம்

    *மாற்றான்

    *கண்ணா லட்டு தின்ன ஆசையா

    *சமர்

    *ஆதலால் காதல் செய்வீர்

    *தலைவா

    *ராட்டினம்

    *3

    *வம்சம்

    *காஞ்சனா

    *ரௌத்திரம்

    *அனந்தபுரத்து வீடு

    *முரண்

43 மதிப்பெண்கள் :-

    *சுண்டாட்டம்

    *தீயா வேலை செய்யணும் குமாரு

    *ஒரு கல் ஒரு கண்ணாடி

    *சிங்கம் 2

    *நேரம்

    *6 மெழுகுவர்த்திகள்

    *கும்கி

    *சென்னையில் ஒரு நாள்

    *எதிர் நீச்சல்

    *கோ

    *மரியான்

    *காஞ்சிவரம்

    *மௌனராகம்

    *மெரினா

    *நான்

44 மதிப்பெண்கள் :-

    *தடையற தாக்க

    *தங்க மீன்கள்

    *துப்பாக்கி

    *வானம்

    *சுந்தரபாண்டியன்

    *சாட்டை

    *வாகை சூட வா

45 மதிப்பெண்கள் :-

    *மதுபானக்கடை

    *ஹரிதாஸ்

    *சூது கவ்வும்

    *அட்டைக்கத்தி

    *நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

    *நந்தலாலா

46 மதிப்பெண்கள் :-

    *விஸ்வரூபம்

    *அரவான்

    *புதுப்பேட்டை

    *மொழி

    *ஆரண்ய காண்டம்

47 மதிப்பெண்கள் :-

    *அங்காடித்தெரு

50 மதிப்பெண்கள் :-

    *மூடர்கூடம்

    *;தெய்வத்திருமகள்

    *வேதம் புதிது

    *ஜென்டில்மேன்

51 மதிப்பெண்கள் :-

    *ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

53 மதிப்பெண்கள் :-

    *சொல்ல மறந்த கதை

54 மதிப்பெண்கள் :-

    *திரிசூலம்

56 மதிப்பெண்கள் :-

    *பரதேசி

59 மதிப்பெண்கள் :-

    *புதிய வார்ப்புகள்
   

Friday 20 September 2013

VARUTHAPPADAATHA VAALIBAR SANGAM - NO SADNESS YOUNGSTER ORGANISATION

 


  படத்திற்குள் போகும்முன் ஒரு சின்ன rewind .. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் சொன்னது ..

    "இந்த படம் தமிழ் சினிமாவ அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகும்னு எல்லாம் சொல்லல.. எப்பிடியாவது நாங்கெல்லாம் அடுத்த கட்டத்துக்கு போயிடணும்னு ஒரு படம் எடுத்திருக்கோம் .. அவ்வளவு தான் ..."

    எனக்கு என்னமோ சரிதான்னு படுது
    இதுக்கப்புறம் சிவகார்த்திகேயன் , சூரியோட மார்கெட் உயரும் , ஸ்ரீதிவ்யாவிற்கு நிறைய வாய்ப்புகள் வரும் , பொன்ராமை நம்பி நிறைய தயாரிப்பாளர்கள் பணம் போடுவார்கள் .. எல்லாம் நடந்தால் நல்லது தான் .. வாழ்த்துக்கள் ..
    கௌரவமே பெரிசு என்று வாழும் சிவனாண்டி (சத்யராஜ்). எதற்குமே வருத்தபடாத வாலிபர் போஸ் பாண்டி (சிவகார்த்திகேயன்) சிவனாண்டியின் மகள் லதாபாண்டி (ஸ்ரீதிவ்யா)வை காதலித்தால் எங்கு போய் முடியும் என்பதே படத்தின் கதை ..
     படத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்தது ராஜேஷின் வசனம் . வசனம் என்பதை விட காமெடி என்றே சொல்லலாம் .. அதுதான் சரியாக இருக்கும் . ஆரம்பம் முதல் இறுதி வரை கதையை பற்றி பெரிதாக சிந்திக்க விடாமல் நம்மை கடத்தி செல்வதில் இந்த காமெடிகள் பெரும் பங்கு விகிக்கின்றன . ஏனென்றால் படத்திர்க்கென்று பெரிதாக கதை ஒன்றும் இல்லை , ஆனால் அதற்க்கான தடம் தெரியாமல் காமெடி மூலம் நம்மை நகர்த்தி செல்கின்றனர் . உண்மையில் இந்த படத்தில் டாஸ்மாக் காட்சிகளும் சந்தானமும் இருந்திருந்தால் பக்கா ராஜேஷ் எம்மின் படம் போலவே இருந்திருக்கும் ( என்ன ஒளிப்பதிவும் இசையும் இன்னும் கொஞ்சம் கூட நன்றாக இருந்திருக்கும் ).
     இரண்டாவதாக படத்தில் எனக்கு பிடித்த விஷயம் பொன்ராமின் திரைக்கதை . இவ்வளவு மொண்ணையான கதைக்கருவை வைத்துக்கொண்டு திரைக்கதையை நீட்டி சென்றிருப்பது பாராட்டப்பட வேண்டியது தான் . கதைப்படி சிவகார்த்திகேயன் ஸ்ரீதிவ்யாவை காதலித்து சத்யராஜின் போலி கவுரவ வேஷத்தை உடைக்க வேண்டும் . அவ்வளவே... இப்படிப்பட்ட கதைக்கருவை வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்தால் படம் ஆரம்பித்தது கொஞ்ச நேரத்திலேயே திசை மாறிய கப்பலாக படம் அலுக்கத்தொடங்கி விடும் .
     ஆனால் இங்கே இந்த கதையை தாண்டியும் ஏராளமான காமெடி கோட்டிங் பூசப்பட்ட காட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன . பிந்து மாதவியினுடனான ஒரு தலை ராகம் , சூரியின் காதல் , "நான் கடவுள்" ராஜேந்திரனின்  பகை , சத்யராஜின் துப்பாக்கி , கிணற்றில் விழுந்த மாட்டை காப்பாற்றுவது , ஆடல் பாடல் நிகழ்ச்சி போன்ற காட்சிகளால் நாம் அறியாமலேயே கதை நகர்ந்து கொண்டு இருக்கிறது (" வருத்தப்படாத வாலிபர் சங்கம் "  கூட இந்த லிஸ்டில் சேரும் சம்பவம் தான் ) . இப்படி நாம் அறியாமலேயே ஒரு கதை திரையில் நகர்ந்து கொண்டு இருப்பதாலோ என்னமோ படம் போரடிக்கவில்லை ( பொதுவாக ராஜேஷ் எம்மின் எல்லா படங்களும் இதே பாணியில் தான் நகரும் . அதிலும் பாஸ்[எ] பாஸ்கரன்  படத்தின் திரைக்கதை எனக்கு ரொம்ப பிடிக்கும் )
       அடுத்ததாக படத்தில் பிடித்தது இமானின் இசையில் பாடல்கள் . படமாக்கப்பட்ட விதத்தில் பெரிசாக ஒன்றும் இல்லை என்றாலும் கேட்க நன்றாக இருக்கின்றது . " ஊதா கலரு ", " பாக்காதே " போன்ற பாடல்கள் ரொம்ப பிடித்தது .
       படத்தின் ஆகப்பெரிய குறை இவ்வளவு மொண்ணையான கதைக்கரு . படத்தின் எல்லா குறைகளும் இதற்குள்ளேயே அடங்கி விடும் . கதைக்கரு மொன்னையானதாலேயே "சத்யராஜ் - சிவகார்த்திகேயன் " என்ற அருமையான கூட்டணி வீணடிக்கப்பட்டிருக்கிறது . சிவா , சத்யராஜ் , சூரி , ராஜேந்திரன் என யாருக்குமே அவர்கள் திறமைக்கான பாதி தீனி கூட கொடுக்கப்பட வில்லை . அதனாலேயே பின்னணி இசை , ஒளிப்பதிவு போன்ற விஷயங்களுக்கும் பெரிதாக சோபிப்பதர்க்கான வாய்ப்பு இல்லை .
      இருந்தாலும் நல்ல படம் .. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது . குடும்பத்துடன் பார்ப்பது நலம் . குழந்தைகளும் , வயசானவர்களும் நிச்சயமாக ரசிப்பார்கள் 

Wednesday 28 August 2013

MADRAS CAFE . . . ACTUALLY JAFFNA CAFE

       






         மெட்ராஸ் கபே ... நேர்மையான ஒரு ராணுவ அதிகாரியின் துப்பறியும் கதை . ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு ஹிந்தி படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன் . செம த்ரில்லர் படம் .
         படத்தை பற்றி ஏராளமான controversyக்கள் இருப்பதால் அதை பற்றின கருத்துக்களை கடைசியில் சொல்கிறேன் .
          ஆரம்பம் முதல் படம் செம்ம விறுவிறுப்பாக செல்கிறது . இந்திய RAW அதிகாரி ஜான் ஆப்ரஹாம் . இலங்கையில் இந்திய படைகளின் தோல்விக்கு சில தேச துரோகிகள் காரணமாக இருக்கிறார்கள் . அதை கண்டு பிடிக்கவும் , சில சர்வதேச காரணங்களுக்காகவும் ஜான் ஆப்ரஹாம் இந்தியாவில் இருந்து இலங்கை அனுப்ப படுகிறார் . அங்கு அவர் நடத்தும் விசாரணைகள் அவரை எங்கெல்லாமோ கொண்டு செல்கிறது . அதனால் அவர் சந்திக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் போன்றவையே படம் . 
         படத்தின் மிக பெரிய வெற்றியே கதை சொல்லப்பட்ட விதம் தான். படத்தின் கதை நம் முன்னாள் பிரதமரின் கொலை பற்றியது . ஏற்க்கனவே பல மொழிகளில் பலவாறு பிரித்து மேயப்பட்ட கதை . இருந்தும் படம் செம்ம விறுவிறுப்புடன் செல்ல காரணம் படம் சொல்லப்பட்ட point  of  view  . கதை முழுக்க முழுக்க ஒரு RAW அதிகாரியின் பின்னாலேயே செல்கிறது . நம் எல்லோருக்கும் இலங்கையில் நடந்து போர் பற்றி தெரியும் . அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  கொல்லப்பட்டதும் தெரியும் . அது எப்படி  நடந்தது என்றும் பார்த்துள்ளோம் . இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் கொலையாளிகள் வாயிலாக பார்த்தல் தானே  எந்த சஸ்பென்சும் இல்லாமல்  சப்பையாக இருக்கும் . ஆனால் ஒரு கொலை நடக்கப்போகிறது என்றே தெரியாமல் வேறு ஏதோ ஒரு காரணத்திற்க்காக வந்த ஒருவர் படிப்படியாக அந்த கொலையை பற்றி தெரிந்து கொள்ளும் போது நமக்கும் அந்த திரில் ஒட்டிக்கொள்ளும் தானே . அது தான் திரைக்கதையின் வெற்றி . கொலைக்கான காரணங்களை வெறுமனே உணர்வு ரீதியாக ப்ரெசண்ட் செய்யாமல் நிஜமாகவே இதன் பின்னால் ஒளிந்து இருக்கும் சர்வதேச அரசியலை தைரியமாகவும் , தெளிவாகவும் , விறுவிறுப்புடனும் திரையில் கொண்டுவந்த இயக்குனர் சூஜித் சிர்க்காருக்கு hats  off . படம் ஆரம்பம் முதலே ராஜீவ் கொலைக்கு எத்தனை நாள் முன்பு நடக்கிறது என்பதை வைத்து தான் விளக்கப்படுகிறது . இருந்தாலும் பாதி படத்திற்கு பிறகுதான் நாம் கொலைக்கான காரணங்களுக்கே வருகிறோம் . அதாவது நாம் எதை மனதில் வைத்து கதையுடன் பயணிக்கிறோமோ , அதையே மறக்கடிக்கசெய்து , நாம் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த  விஷயத்திற்கு திருப்பி கொண்டு வருகிறார்கள் . எனவே நமக்கு பழக்கப்பட்ட கதையை பார்க்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் புதிய திரில்லர் பார்ப்பது போல் உள்ளது . அதே போல் எதிரிகளின் இன்டர்செப்டுகளை, டீகோட் செய்யும் இடங்களும் செம இன்டலிஜென்ஸ் ...  சோம்நாத் டே , சுபெண்டு பட்டாச்சார்யா வின் திரைக்கதை அவ்வளவு பவர்புல் . 
          ஜான் ஆபிரகாம் இந்த கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு . எந்த நேரத்திலும் அசராமல் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய துடிக்கும் அதிகாரியாக வருகிறார் . அந்த இடம் , இந்த இடம் என்றில்லாமல் எல்லா படம் முழுக்கவே இயல்பான நடிப்பை வழங்கி உள்ளார் . ஆனால் படத்திலேயே சிறந்த நடிப்பு பாலா கதாபத்திரதினுடையது தான் . பிரகாஷின் அருமையான நடிப்பு. முக்கியமாக தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் செம்ம கெத்து . ஜானின் மேலதிகாரியும் ராஜீவ் கொல்லப்பட்ட பிறகு அழும் அந்த காட்சியில் மனதில் இடம் பிடிக்கிறார் . 
         படத்தில் இடம் சார்ந்த detailing அவ்வளவு நேர்த்தியாக உள்ளது . LTF (Lankan  Tamil  Front )ன் பேஸ் கேம்ப் செல்லும் வழி எல்லாம் நிஜமாகவே காட்டிற்கு செல்லும் feelling கொடுக்கிறது . யாழ்பாணம் , சென்னை , மதுரை , லண்டன் , சிங்கப்பூர்  என பறந்து பறந்து செல்லும்  கதையில்  எங்குமே சிறிதும் குழப்பம் இல்லாமல் நம்மால் கதையுடன் பயணிக்க முடிகிறது .
         மிகவும் கவனிக்கப்பட வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய விஷயம் ஒளிப்பதிவு . ஒளிப்பத்வாளர் கமல்ஜீத் நேகி படத்தின் இந்த டோனை கொண்டுவர கடுமையாக உழைத்துள்ளார் . அதிலும் ஆரம்பத்தில் வரும்  அந்த போர் காட்சிகள் மிகவும் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது . படத்தில் பாடல்கள் திணிக்கபடாதது பெரும் சந்தோஷம் , எப்படி பட்ட பாடலாக இருந்தாலும் இந்த படத்தில் அது ஸ்பீட் ப்றேக்கராகவே இருந்திருக்கும் . ஆனால் பின்னணி இசை சில இடங்களில் கொஞ்சம் கூட நன்றாக இருந்திருக்கலாம் . 
        படத்தில் நான் காணும் சில குறைகளும் உள்ளன  . மொழி சார்ந்த detailing  படத்தில் மிகவும் மோசம் . நன்றாக ஹிந்தி பேசும் ஈழத்தமிழர்கள் யாருமே ஈழத்தமிழ் பேசவில்லை . கொலையாளிகள் தங்கி இருக்கும் அந்த வீட்டில் அவர்கள் பேசும் சில டயலாக் ஈழத்தமிழ் தானா , இல்லை மலையாளமா என்று சந்தேகமாக உள்ளது . அதே போல் கதை நடப்பது 1990களின் தொடக்கம் . ஜான் ஒரு பெட்டிக்கடையில் நின்று பேசும்போது அங்கு ஒரு குமுதம் சிநேகிதி இதழ் தொங்க விடப்பட்டுள்ளது . அதன் அட்டையில் நடிகை சிநேகா படம் உள்ளது . சிநேகா 2001ம் ஆண்டு சுசி கணேசன் இயக்கத்தில் வந்த "விரும்புகிறேன் " படத்தில் அல்லாவா அறிமுகம் ஆனார் . .... இது போன்ற சின்ன சின்ன தவறுகள் வராமல் பார்த்திருக்கலாம் . என்ன இருந்தாலும் செம்மையான த்ரில்லர் படம் . டிக்கட் காசு வீணாக போகாது .. 


        படம் பற்றின controversyக்கள் . . .


        படத்தில் யாரை பற்றியும் திணிக்கப்பட்ட  சித்தரிப்புகள் இல்லை என்றே எனக்கு தோன்றியது .
        கிளைமாக்சில் ஜான் ரபீந்தரநாத் தாகூரில் கீழ்கண்ட வரிகளை சொல்கிறார் .

             " Where the mind is without fear and the head is held high 
               Where knowledge is free 
               Where the world has not been broken up into fragments 
               By narrow domestic walls 
               Where words come out from the depth of truth 
               Where tireless striving stretches its arms towards perfection 
               Where the clear stream of reason has not lost its way 
               Into the dreary desert sand of dead habit 
               Where the mind is led forward by thee 
               Into ever-widening thought and action 
               Into that heaven of freedom, my Father, let my country awake  "


           மொழி பற்றின குறுகிய உணர்வில்லாமல் " யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்று வாழ்பவர்களுக்கு இந்த படத்தை எந்த சஞ்சலமும் இல்லாமல் பார்க்க முடியும் என்பதே என் கருத்து